Sunday 2 October 2011

mangaiyarai pirapatharke



                                              மங்கையராய்ப்  பிறப்பதற்கே...


  கரு முதல் கல்லறை வரை...
*கருவாய் இருக்கும்போதே காட்டிக்கொடுக்கப்பட்டால்
       நீ கலைக்கப்படலாம்...

*தவறிப்  பிறந்தாலும் தாய்ப்பாலாய் உனக்கு 
       கள்ளிப்பால் கொடுக்கப்படலாம்...

*உயிரை பறிக்க உணவாய் உனக்கு
        நெல்மணி தரப்படலாம்...


*உறவை முடித்து வைக்க சிலநேரம் நீ
         உயிரோடும் புதைக்கப்படலாம்...


*அரசுத்திட்டம் போலவே அரசுத்தொட்டிலிலும்
         அவசரமாய் நீ அடக்கம் செய்யப்படலாம்...


*நீ பிறந்த நேரத்தில் சில நோயாளிப்பெருசுகள்
         இறந்தாலும் இராசி இல்லாதவள் 
          அதிர்ஷ்டம் கெட்டவள் என  அடுக்கடுக்காய் 
         உனக்கு பெயர்கள் சூட்டப்படலாம்...

*உலகமென்பது உனக்கு உன் வீட்டு சமயலறையாய்
         மட்டுமே மாற்றப்படலாம்...

*பள்ளிப்படிப்பும் கூட உன் வீட்டுப்படியோடு 
        முடிக்கப்படலாம்...

*அடிமையாய் நடக்கப்பழகுமாறு உனக்கு 
        அடிப்படைக்கல்வி கற்றுத்தரப்படலாம்...


*அடங்கிநடப்பதே அன்பென்று உனக்கு
        அறிவுறுத்தப்படலாம்...

*நீ பேசுவதும் சிரிப்பதும் கூட 
        குற்றமென்று உனக்கு சட்டமாக்கப்படலாம்...

*மாப்பிள்ளை பார்க்கும் நாடகமும் அவசரமாய் 
        உனக்கு அரங்கேற்றம் செய்யப்படலாம்...

*உன் மௌனத்தைக்கூட சம்மதமென நினைத்து 
       கட்டாய கணவன் உனக்கு கல்யாணத்தில் வரலாம்...

*கோவலக் கணவனுக்கும் கண்ணகியாய் நடக்க நீ 
       தண்டிக்கப்படலாம்...

*உன் உரிமைக்காக நீ எதிர்க்கும் போது
       மண்ணெண்ணெய் சிலநேரம் உன்னையும் எரிக்கலாம்...


*சட்டங்கள் உன் விஷயத்தில் மட்டும் ஏனோ 
       சத்தியம் மீறலாம்...

*உன் கொலை என்பது பல நேரம் 
       தற்கொலையாய் நிறம் மாறலாம்...

*காவல் நிலையங்களில்கூட 
       உன் கற்பு களவாடப்படலாம்...

*இழந்த கற்புக்கும் விலையாய் நீ விலைமாதாய்
       விளம்பரம் செய்யப்படலாம்...

*ஆகையால் இனிமேலாவது யாரும் 
      மங்கையராய்ப் பிறப்பதற்காக மறந்தேனும் 
       மாதவம் செய்ய வேண்டாம்... 

1 comment:

  1. மிகவும் அருமை. முற்றிலும் உண்மை. பெண்ணின் நிலையோ கொடுமை.

    ReplyDelete

NANBAN...

நண்பன்... 1 *முகத்துக்கு முன்னால் திட்டியும்!!!... முதுகுக்குப் பின்னால் தட்டியும் மட்டுமே கொடுப்பான்!!! நண்பன்!!!... 2 ...