Friday 7 March 2014

MARCH-08

 மகளிர் தினம்...


*குழந்தைகள் பலர் ஒன்றாய் 
  விளையடிக்கொண்டிருந்தார்கள்...
  எட்டு வயது சிறுவன் 
  ஐந்து வயது சிறுமியிடம் சொன்னான்...




 * நீ  பாத்திரம் தேய்த்து 
  துணி துவைத்து சமையலை முடித்து 
  வீட்டை சுத்தம் செய்து வை...
  நான் அலுவலகம் சென்றுவிட்டு 
  அந்திசாயும் நேரம் வருகிறேன்...

*மூன்று பெண் குழந்தைகள் 
  பெற்ற ஒருவர் தன்  நண்பரிடம் 
  சொல்லிக் கொண்டிருந்தார்...
  இப்போது என் மனைவி 
  மூன்று மாதம்...
  நான்காவது  கண்டிப்பாய் 
  ஆண்  குழந்தைதான்.


*அது ஒரு படத்தின் துவக்க விழா...
  அந்த சூப்பர் ஹீரோவுக்கு 
  அது ஆறாவது  படம்...
 அறிமுக நாயகியாய்  அவள்...
  மூன்று வருடங்களில் அவள் 
  தங்கையாய் மாறினாள்...
  பத்தாம் வருடம் அவருக்கே 
  அவள் அம்மாவாய்  மாறிவிட்டாள்...
  அதுவரையில்  அவளுக்கு 
  திருமணம்கூட நடந்திருக்கவில்லை...


 *இருபத்தைந்து வருடங்களுக்குப் பிறகு 
  அந்த சூப்பர் ஹீரோவின் 
  அறிமுக நாயகியாய் மீண்டும் அவள் மகள்...

*அது தேர்தல் வருடம்...
  ஆறுமுறை MLA -வாய் 
  இருந்தவருக்கு இந்த முறை சிக்கல்...
  அவர் தொகுதி பெண்கள் 
  தொகுதியாய்  மாறியது...
  தீவிரமாய் ஆலோசித்தார்...
  தன்னுடைய பெயரையே 
  எழுதத் தெரியாத தன்  மனைவியை 
  தேர்தலில் நிறுத்தி 
  இந்த முறையும் வெற்றி பெற்றார்...


*பாராளுமன்றத்தில் முதல் 
  பெண் பிரதமர் தன் சாதனைப் 
  பட்டியலை வாசிக்கிறார்...
  நாங்கள் தான் பெண்களுக்கு 
  அரசியலில் 33% இட ஒதுக்கீடு 
  கொண்டு வந்திருக்கிறோம்...
  தேர்தலில் போட்டியிட முடியாத அவரின் 
  கணவர் பார்வையாளர் வரிசையில் அமர்ந்து 
  தனக்குள் சிரித்துக் கொள்கிறார்...

*அவளை ஐந்தாய் முறையாக பெண் 
  பார்க்க வருகிறார்கள்...
  அரசாங்க வேலையாம்...
  ஐம்பது பவுனும் அவளின் 
  சௌகரியத்திற்காக காரும் 
  கேட்கிறார்கள்... 
  மௌனமே சம்மதமாய் 
  நிச்சயம் நடக்கிறது...

  
*திருமண நாளில் கூடமெங்கும் 
  சீர் வரிசைப்  பொருட்கள் 
  நிறைந்து  கிடக்கின்றன...
  அவள் மனம் மட்டும் வெறுமையாய்...
  அடக்கமாய் அவள் நிற்க 
  கால் மேல் கால் வைத்து கணவன் உட்கார 
  திருமண கோலம் பதிவு செய்யப்படுகிறது...

*முதல் இரவில் அவன் 
  இன்று தேதி எட்டு...
  இந்த மாத ஏழு நாள் சம்பளத்தை மட்டும் 
  உன் வீட்டில் கொடு என்கிறான்...
  தாலியின்  பாரம்  தாங்காமல் 
  அவள் தலை குனிகிறாள்...
  அன்றைக்கு தேதி மார்ச்-8...


*ஆணும் பெண்ணும் சரிநிகர் சமம்...
  சென்ற நூற்றாண்டே 
  பாரதி சொன்னான்...
  எங்கிருந்தோ ஒரு பேச்சாளரின் 
  ஆவேசக்குரல் ஸ்பீக்கரில் தெறிக்கிறது...

*ஆமாம்...எந்த நூற்றாண்டில் 
  இங்கு பெண்ணும் ஆணும் சமம்...  


  




NANBAN...

நண்பன்... 1 *முகத்துக்கு முன்னால் திட்டியும்!!!... முதுகுக்குப் பின்னால் தட்டியும் மட்டுமே கொடுப்பான்!!! நண்பன்!!!... 2 ...